×

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட 4 பேர் காரணம்: கணவர் ஹேம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை:  சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் காரணம் என சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பர் மாதம் பிரபல ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் பதிவு திருமணம் நடந்திருந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஹேம்நாத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்நிலையில் கடந்த 25ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ‘‘நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான்தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிரூபிக்கவே உயிரோடு இருக்கிறேன்.

சித்ரா மரணத்துக்கு முன்னாள் அமைச்சர், ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்? அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்ப கிடைக்க மாட்டாள். தற்போது என் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன்.மேலும், சித்ரா மரணத்திற்கு காரணமானவரிடம் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் பறிக்க முயல்கிறது. அதற்கு நான் ஒத்துழைக்கவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். தற்போது நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கி உள்ளேன்.

என்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களின் பெயரை வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்த அரசியல் தலைவர் மிரட்டி வருகிறார். இப்படியே இரு தரப்பினரும் என்னை மிரட்டி வருவதால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனது மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயிர் வாழ விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒருவேளை நான் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் சொன்ன தகவல்களை வெளியிடுவேன்”.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : hamnath , Four people, including , death Chitra: husband Hemnath sedition
× RELATED சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு...